ஜி. நாகராஜன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜி. நாகராஜன்
பிறப்பு1 செப்டம்பர் 1929
மதுரை,
சென்னை மாகாணம், பிரித்தானிய இந்தியா (தற்போது தமிழ்நாடு, இந்தியா)
இறப்பு19 பெப்ரவரி 1981(1981-02-19) (அகவை 51)
மதுரை, தமிழ்நாடு, இந்தியா
புனைபெயர்ஜி. என்.
தொழில்எழுத்தாளர், ஆசிரியர்
குடியுரிமைஇந்தியர்
கல்வி நிலையம்மதுரைக் கல்லூரி
வகைபுதினம், சிறுகதை
துணைவர்ஆனந்தா (1959-62?)
நாகலட்சுமி (1962-
இறப்பு வரை)
பிள்ளைகள்ஆனந்தி (மகள்)
கண்ணன் (மகன்)

ஜி. நாகராஜன் (1 செப்டம்பர் 1929 - 19 பிப்ரவரி 1981), தமிழ்நாட்டைச் சேர்ந்த சிறுகதை எழுத்தாளர் மற்றும் ஆசிரியர் ஆவார். பொதுவாக இலக்கியத்தால் கவனிக்கப்படாத விளிம்புநிலை மனிதர்களான பாலியல் தொழிலாளர்களையும் அவர்களுக்கான தரகர்களையும் கதைகளுக்குள் கொண்டு வந்தவர்.

வாழ்க்கை[தொகு]

நாகராஜன், மதுரையில் 1 செப்டம்பர் 1929 அன்று ஒரு பிராமணக் குடும்பத்தில் பிறந்தார். இவர் குடும்பத்தில் ஏழாவது குழந்தை. தந்தை கணேச அய்யர் வழக்கறிஞர். பழனியில் வழக்கறிஞர் தொழிலை செய்துவந்தார். இவருக்கு இரு சகோதரர்கள், இரு சகோதரிகள் உண்டு.

இவர் மதுரை அருகிலுள்ள திருமங்கலத்தில் இருந்த தாய்மாமன் வீட்டில் தங்கி, ஒன்பதாம் வகுப்பு வரை திருமங்கலம் பி. கே. என். வித்யாசாலாவில் படித்தார். பின் பழனியில் 10 மற்றும் 11 வகுப்புகளை முடித்தார். புகுமுக வகுப்பை மதுரைக் கல்லூரியில் படித்து பல்கலைகழக முதல் மாணவராக வெற்றி பெற்றார். கணிதத்தில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்று அதற்கான தங்கப்பதக்கத்தை அறிவியல் மேதை சி.வி.ராமிடமிருந்து வாங்கினார். மதுரைக்கல்லூரியில் இளங்கலை பட்டப்படிப்பில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார். பின்னர் முதுகலைப் படிப்பையும் அங்கு படித்துத் தேர்ச்சி பெற்றார்.

காரைக்குடியில் கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றினார். அதன் பிறகு சென்னை கணக்காயர் அலுவலகத்தில் சிறிது காலம் பணியாற்றினார். அதன் பின்னர் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றினார்.

1959 ஆம் ஆண்டு இவரும் ஆனந்தா என்பவரும் திருமணம் செய்து கொண்டனர் . ஆனந்தா தீ விபத்து ஒன்றில் இறந்து போனார். பின்னர் 1962ல் பள்ளி ஆசிரியையான நாகலட்சுமி என்பவரை இரண்டாவதாகத் திருமணம் செய்து கொண்டார். இவ்விணையருக்கு ஆனந்தி, கண்ணன் என இரு பிள்ளைகள் பிறந்தனர்.

அரசியல் ஈடுபாடு[தொகு]

இவர் சென்னையில் பணியாற்றிய காலகட்டத்தில் அவருக்கு அரசியல் ஈடுபாடு ஏற்பட்டது. இடதுசாரிக் கொள்கைகளில் கவரப்பட்ட இவர் மதுரையில் கல்லூரியில் பணியாற்றிய போது இடதுசாரி கட்சிக்கான அரசியலில் முழுநேர ஈடுபாடு ஏற்பட்டது. கம்யூனிச சிந்தனையாளர்கள் பலருடனும் தொடர்பு வைத்துக் கொண்டார். கல்லூரியில் மிகச்சிறந்த ஆசிரியராக விளங்கிய இவரை ஆராய்ச்சிப் படிப்புக்காக அமெரிக்காவிற்கு அனுப்ப கல்லூரி நிர்வாகம் திட்டமிட்டது. ஆனால் அவர் இடதுசாரி இயக்கத்தில் சேர்ந்து வேலையை துறந்து முழுநேர கட்சி ஊழியராக ஆனார். தனியார் பயிற்சிக் கல்லூரிகளில் ஆசிரியராகப் பணியாற்றியபடி அவர் கட்சி வேலைகளில் ஈடுபட்டு வந்தார்.

1952 முதல் இவர் திருநெல்வேலிக்கு சென்று பேராசிரியர் நா.வானமாமலையின் தனிப்பயிற்சிக் கல்லூரியில் வேலை செய்யத் தொடங்கினார். சுந்தர ராமசாமி, ஜெயகாந்தன் முதலிய எழுத்தாளர்களுடன் தொடர்பு கொண்டார். 1956இ-ல் கட்சியுடன் ஏற்பட்ட கருத்து முரண்பாட்டால் கட்சிப் பொறுப்பை விலக்கிக் கொண்டார்.

அதன் பிறகு மதுரைக்கு திரும்பி தனிப்பயிற்சிக் கல்லூரி ஒன்றில் ஆசிரியராகப் பணியாற்றினார். அங்கு 1969-இல் புகுமுக வகுப்பு மாணவராக இருந்த பின்னாளைய எழுத்தாளர் சி. மோகன், இவரிடம் கணிதம் பயின்றார்.[1]

படைப்புகள்[தொகு]

இவர் முறையாக எழுதியவர் அல்ல. ஆங்காங்கே எழுதி எவரிடமாவது கொடுத்துவிட்டுச் செல்லும் வழக்கம் அவருக்கு இருந்தது. 1950 முதலே சிறுகதைகள் எழுதியிருக்கிறார். 1957ல் ஜனசக்தி மாத இதழில் “அணுயுகம்” என்ற கதையை எழுதியதும் புகழ் பெற்றார்.பித்தன் பட்டறை என்ற பதிப்பகம் வழியாக “குறத்திமுடுக்கு” என்ற குறுநாவலை வெளியிட்டார். “நாளை மற்றும் ஒரு நாளே” இவரது புகழ் பெற்ற நூல். “கண்டதும் கேட்டதும்” என்ற சிறுகதைத் தொகுதியும் வெளியாகியுள்ளது. ஆங்கிலத்திலும் சில கட்டுரைகளை எழுதியிருக்கும் இவர் “With fate conspires” என்ற ஆங்கில நூலையும் எழுதி வெளியிட்டிருக்கிறார். மாணவர்களுக்காக காந்தியின் வாழ்க்கை வரலாற்றையும் எழுதியிருக்கிறார்

நாவல்கள்[தொகு]

  • நாளை மற்றும் ஒரு நாளே,
  • குறத்தி முடுக்கு.

சிறுகதைகள்[தொகு]

  • எங்கள் ஊர்
  • டெர்லின் ஷர்ட்டும் எட்டுமுழ வேட்டியும் அணிந்த மனிதர்
  • யாரோ முட்டாள் சொன்ன கதை
  • தீராக் குறை
  • சம்பாத்தியம்
  • பூர்வாசிரமம்
  • அக்கினிப் பிரவேசம்
  • நான் புரிந்த நற்செயல்கள்
  • கிழவனின் வருகை
  • பூவும் சந்தனமும்
  • ஜீரம்
  • போலியும் அசலும்
  • துக்க விசாரனை
  • மனிதன்
  • இலட்சியம்
  • ஓடிய கால்கள்
  • நிமிஷக் கதைகள்

மறைவு[தொகு]

கடைசிக் காலத்தில் மார்க்சியத்தில் முற்றிலும் நம்பிக்கை இழந்த நாகராஜன், அக் கொள்கை மானுட எதிர்ப்புத்தன்மை கொண்டது என்று எண்ண ஆரம்பித்தார். இக் காலகட்டத்தில் இவருக்குப் போதைப் பழக்கம் ஏற்பட்டது. அதன் விளைவாக நோயுற்று மதுரை அரசு இராசாசி மருத்துவமனையில் சி. மோகன் மற்றும் அவர் நண்பர் சிவராமகிருஷ்ணனால் சேர்க்கப்பட்ட நாகராஜன், 19 பிப்ரவரி 1981 அன்று அதிகாலை 12 மணியளவில் தன் 52-ஆம் அகவையில் காலமானார். மறுநாள் அவருடைய உடல் மருத்துவமனையிலிருந்து நேராக தத்தனேரியில் உள்ள மயானத்துக்குக் கொண்டுசெல்லப்பட்டு, அங்கு மிக நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என 15 பேர் முன்னிலையில், சடங்குகளுக்குப்பின் எரியூட்டப்பட்டது.[1]

புகழ்[தொகு]

நாகராஜனின் மறைவுக்குப் பின் அவரை முதன்மைக் கதைமாந்தராகக் கொண்ட ஐந்து சிறுகதைகள் தமிழில் வெளிவந்துள்ளன[2]:

ஆண்டு தலைப்பு ஆசிரியர்
1984 விரல் அசோகமித்திரன்
1985 ஐந்து ரூபாயும் அழுக்குச் சட்டைக்காரரும் திலீப்குமார்
1993 ஒருநாள் பிரபஞ்சன்
2004 நண்பர் ஜி.எம். சுந்தர ராமசாமி
2015 விலகிய கால்கள் சி. மோகன்

"I fall upon the thorns of life! I bleed!"

-- நாகராஜனின் இறுதிச் சொற்கள் (மூலம்: பிரித்தானியக் கவிஞர்
பெர்சி பைச்சு செல்லி எழுதிய
To a Skylark)[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 https://www.hindutamil.in/news/literature/132981-.html. {{cite web}}: Missing or empty |title= (help)
  2. https://www.hindutamil.in/news/literature/136334--2.html. {{cite web}}: Missing or empty |title= (help)
  3. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; :1 என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜி._நாகராஜன்&oldid=3840251" இலிருந்து மீள்விக்கப்பட்டது