பெருந்தமனி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பெருந்தமனியின் வரைபடத்தோற்றம்

உடலில் மிகப்பெரிய தமனியானது பெருநாடி அல்லது பெருந்தமனி (Aorta) என அழைக்கப்படுகிறது. இடது கீழ் இதயவறையில் இருந்து ஆரம்பித்து வயிறு வரை நீண்டு, பின்னர் முடிவடையும் இடத்தில் இரு கிளைகளாகப் பிரிந்து பொதுப் புடைதாங்கி நாடியாகச் (common iliac artery) செல்லுகின்றது. உடலின் அனைத்துப் பாகங்களுக்கும் ஒட்சிசனேற்றிய குருதியைத் தொகுதிச் சுற்றோட்டம் மூலம் கொண்டு செல்லுகிறது. [1]

பெருந்தமனியின் பகுதிகளும் செல்லும் பாதையும்[தொகு]

ஐந்து பகுதிகளாக பெருந்தமனி பிரிக்கப்பட்டுள்ளது:[2][3]

  • ஏறு பெருந்தமனி - இதயத்திற்கும் பெருநாடி வில்லிற்கும் இடைப்பட்ட பகுதி
  • பெருநாடி வில் - உச்சிப் பகுதி, வில் போன்ற வளைந்த அமைப்பைக் கொண்டிருக்கும்.
  • இறங்கு பெருந்தமனி - பெருநாடி வில்லில் இருந்து பெருந்தமனி பிரிவடையும் வரையிலான பகுதி

முளையவியல் மாற்றங்கள்[தொகு]

முலையூட்டி அல்லது பறவை இனத்துக்குரிய முளைய வளர்ச்சியின் போது ஆறு சோடி குருதிநாளங்கள் கொண்ட அமைப்பாக பெருநாடி விற்கள் விளங்குகின்றன, முளைய வளர்ச்சியின் போது இவற்றிலிருந்து தமனிகள் உருவாகுகின்றன. பெருநாடி விற்களில் உள்ள நான்காவது வளைவில் இருந்தே பெருந்தமனி (பெருநாடி) உருவாகுகிறது. மூன்றாவது வளைவில் இருந்து புயத்தலை நாடியும் (brachiocephalic artery), ஆறாவது வளைவில் இருந்து நுரையீரல் நாடியும் உருவாகுகின்றன.

இதயத்தின் குறுக்குவெட்டுமுகத் தோற்றம்

சிறப்புக்கூறுகள்[தொகு]

பெருந்தமனியானது மீள்தன்மை கொண்டது, இந்தச் சிறப்பினால் பெருந்தமனி நன்றாக இழுபடக் கூடியதாக அமைந்துள்ளது. பெருந்தமனியிலேயே இரத்த அழுத்தமானது உயர்வாகக் காணப்படும், பெருந்தமனியில் இருந்து சிறிய தமனிகள், மயிர்த்துளைக்குழாய்களிற்குச் செல்லச்செல்ல அழுத்தம் குறைந்துகொண்டே செல்கின்றது. மழமழப்புத் தசை, நரம்புகள், கலங்கள் போன்ற அமைப்புகளால் பெருந்தமனி உருவாக்கப்பட்டுள்ளது, இதன் சுவர் மூன்று வகையான படைகளைக் கொண்டுள்ளது, அவையாவன:

  • வெளியங்கிப்படை ( tunica adventitia),
  • நடுவங்கிப்படை (tunica media),
  • உள்ளங்கிப்படை (tunica intima).

பெருந்தமனிக்குரிய ஊட்டப்பொருளை மிகச்சிறிய தமனியான நாளக்குழல் (vasa vasorum – தமனிகளின் தமனி) வழங்குகிறது. பெருந்தமனிவில்லிலே காணப்படும் அழுத்த ஏற்பிகளும் (baroreceptors) வேதிய உணர்வு ஏற்பிகளும் (chemoreceptors) குருதி அழுத்தத்தையும் குருதியில் கரியமிலவளியின் அளவினையும் கண்காணித்து மூளையின் நீள்வளையமையவிழையத்திற்குத் தகவலை அனுப்புகின்றன. இத்தகவலைப் பெற்ற மூளையின் செயற்பாடு மூலம் உடலின் சமநிலை பேணப்படுகிறது.

உசாத்துணைகள்[தொகு]

  1. Jean Hopkins, Charles William McLaughlin, Susan Johnson, Maryanna Quon Warner, David LaHart, Jill D. Wright (1995). Human Biology Health. Englewood Cliffs, New Jersey: Prentice Hall. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-13-981176-1. 
  2. Tortora, Gerard J: "Principles of Human W. & Karen A. Koos: Human Anatomy, second edition, page 479. Wm. C. Brown Publishing, 1994. (ISBN 0-697-12252-2)
  3. De Graaff, Van: "Human Anatomy, fifth edition", pages 548-549. WCB McGraw-Hill, 1998. (ISBN 0-697-28413-1)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெருந்தமனி&oldid=3295178" இலிருந்து மீள்விக்கப்பட்டது