மாந்தவுருவகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மாந்தர்களின் தனிப்பண்புகளைப் பிற உயிரினங்கள் அல்லது உயிரற்ற அஃறிணைப்பொருட்களின் மேல் சாற்றிக் கூறுவது மாந்தவுருவகம் (anthropomorphism) எனப்படும். பல வேளைகளில் சமயம், நாடு, பொருளியல் இயக்கம் போன்ற உருவமற்றவையும் கருத்தளவில் மட்டுமே உள்ளனவுமாகிய நுண்பொருட்களின் மீதும் மாந்தரின் பண்புகளை இவ்வாறு ஏற்றுவர்.

உளவியல் பின்புலம்[தொகு]

மாந்தவுருவகம் என்பது மனிதரின் சிந்தையில் ஆழமாக அமைந்துள்ள உருவகப் பகுப்பாய்வு (reasoning by analogy) முறையின் வெளிப்பாடு என்று அறிஞர்கள் கருதுகின்றனர். உருவமற்றவையும், உற்று அறியவியலாதவையுமாகிய நுண்பொருட்களைப் பற்றிய கருத்தாக்கத்தின்போது உருவகங்களின் துணையை நாடுவதால், பல வேளைகளில் இவ்விளைவு ஏற்படுவதாகத் தெரிவிக்கின்றனர்.[1]

சமயத்தில் மாந்தவுருவகம்[தொகு]

இராமாயணத்தில் சீதையை இராவணன் கவர்ந்து செல்கையில் சடாயு என்ற கழுகு தடுக்க முற்படுவதாக அமைந்த காட்சி இரவிவர்மா ஓவியத்தில்
கருடன், பேளூர், கர்நாடகா
இராமாயணக் காட்சி:ராமன் வாலியை மரத்தின் பின்புறம் மறைந்திருந்து தாக்குதல். காண்க மனித பண்புகள் உடைய குரங்குகள்

பல்வேறு சமயக்கதைகளில் அஃறிணைப்பொருட்களையும் மாந்தரல்லாத விலங்குகளையும் மனிதப்பண்புகள் உள்ளவர்களாகக் காட்டியுள்ளனர். இந்து சமயத்தில் நெருப்பை அக்கினியாகவும், காற்றை வாயுவாகவும், நீரை வருணனாகவும், நிலத்தைப் பூதேவியாகவும், ஞாயிற்றைச் சூரியனாராகவும் உருவகப்படுத்தியது முதலாக எண்ணற்ற எடுத்துக்காட்டுகள் உள்ளன. சாளுக்கியர்களின் பல்வேறு சிற்பங்களில் இடம்பெற்றுள்ள கருடன் ஓர் கற்பனை மனிதன். கருடனுக்குப் பறவைகளின் இறக்கையும் மனித உடலும் உண்டு.

கிரேக்கப் பழங்கதைகளிலும் கடவுள்களிடத்தில் மாந்தரின் பண்புகளைச் சாற்றியுள்ளனர். சியுசு, அப்பல்லோ போன்ற கடவுள்களை பல வேளைகளில் மனித உருவில் காட்சிப்படுத்துவர். உரோமர்களின் பழங்கதைகளிலும் அப்போலோ ஒரு முதன்மையான கடவுள் ஆவார். ஈபுரு மொழி பேசியவர்களிடத்தில் இதே போல் இருந்த நம்பிக்கைகளின் எச்சங்கள் பழைய ஏற்பாட்டில் தென்படுகின்றன.

C1
இரா
C2
இரா
C3
தோத்து
C4
கிணும்
C5
கிணும்
C6
அணுபிசு
C7
சேட்டு
C8
மின்
C9
அத்தோர்
C10
முஃகாத்து
C1
C2
C3
C4
C5
C6
C7
C8
C9
C10

எகிப்தியர்கள் மூவாயிரம் ஆண்டுகளுக்கு[2] முன்னர் பயன்படுத்தியதாகக் கருதப்படும் எழுத்து முறை பெரும்பாலும் படவெழுத்துக்களைக் கொண்டிருந்தது. இவ் எழுத்துக்களில் பல அவர்களது நம்பிக்கைகளில் இருந்த கடவுள்களைக் குறித்ததாக அறியப்படுகிறது. படத்தில் காணும் வெவ்வேறு எகிப்துக் கடவுளர்களைக் குறிக்கும் குறியீடுகள் மனிதர்களை ஒத்த உருவத்தைக் காட்டுகின்றன. இதன் வழியாக பண்டைய எகிப்தியர்களது சமயத்தில் கடவுள்களை மனித உருவத்தில் எண்ணியிருந்தது அறியப்பட்டுள்ளது.

மொழியிலும் இலக்கியத்திலும் மாந்தவுருவகம்[தொகு]

ஆண்மயிலொன்று பெண்மயிலை ஈர்ப்பதற்காக ஆடுகிறது. இதைப் பேகன் குளிரில் நடுங்குவதாகத் தவறாகப் புரிந்துகொள்வதாக ஒரு பழங்கதை உண்டு.

வழங்குமொழியில் பல இடங்களில் ஆகுபெயர்கள் பயன்படுகின்றன. இவற்றில் பல மாந்தவுருவகத்தின் வெளிப்பாடுகளே. எடுத்துக்காட்டாக உலகம் வியந்தது என்னும் முற்றுத்தொடரைக் கூறலாம்.

வழங்குமொழி தவிர தமிழ் இலக்கியத்திலும் பல பாடல்களில் மாந்தவுருவகத்தைக் காணலாம். காட்டாகச் சிலப்பதிகாரத்தில் உள்ள பாடலொன்றை எடுத்துக் கொள்ளலாம்.[3]

கோவலனும் கண்ணகியும் மதுரைக்குள் நுழைகையில் அவர்களை உள்ளே வரவேண்டாம் என்று சொல்லும் வகையில் வாயில் தோரணத்தின் மீதிருக்கும் கொடியொன்று குறிப்பறிவுறுத்துவதாக இப்பாடல் கூறுகிறது. இந்தப்பாடலில் தற்குறிப்பேற்ற அணியைப் பயன்படுத்தியுள்ளதையும் நோக்கலாம்.

பாலுறவிற்குப் பெண் மயிலை ஈர்ப்பதற்காகத் ஆண் மயில் தோகை விரித்து ஆடுவதைக் காணும் பேகன், அம்மயில் மாந்தர் குளிரில் நடுங்குவது போல் நடுங்குவதாக எண்ணி அதன் துயர்தீர்க்கப் போர்வை ஒன்றை அளித்தான் என்னும் கதை மாந்தவுருவகத்தின் மற்றொரு எடுத்துக்காட்டாகும். மனுநீதிச் சோழனின் தேர்க்காலில் அடிபட்டு இறந்த கன்றின் தாய்ப்பசு அறம் வேண்டி அரண்மனையில் கட்டப்பட்டிருந்த நீதிமணியை அடித்ததாக ஒரு கதை உண்டு. இதேபோல் நன்னெறிகளை அறிவுறுத்துவற்காகப் புனையப்பட்ட பஞ்சதந்திரக்கதைகள் போன்ற பல கதைகளில் மாந்தவுருவகம் கையாளப்பட்டிருப்பதைக் காணலாம்.

இலூயி கரோல் எழுதிய ஆலிசின் விந்தை உலகம் என்ற ஆங்கில நூலில் பல விலங்குகளும், சீட்டாட்டம் ஆடப் பயன்படும் அட்டைகளும் மாந்தரைப்போலவே பேசுவதும் விளையாடுவதும் போலப் பல காட்சிகள் அமைந்துள்ளன. பகடிப்படங்களில் வரும் பாத்திரங்களில் பெரும்பாலானவை அஃறிணைகளாக இருந்தும் அவை மாந்தரைப் போன்ற உணர்வுகள் உடையனவாகவும் பேசும் தன்மையுடையனவாகவும் காட்டப்படுவது வழக்கம். கால்வினும் ஆபுசும் கதையில் வரும் ஆபுசு என்ற பொம்மைப்புலி மாந்தரைப்போலவே எண்ணுவது போலவும் கால்வினுடன் உரையாடுவது போலவும் புனையப்பட்டிருக்கும்.[4] திரைப்படங்கள் பலவற்றிலும் விலங்குகள் இரக்கம், பழிதீர்க்கும் எண்ணம் முதலியவற்றைக் கொண்டு அவற்றின் வெளிப்பாடாகத் திட்டம் தீட்டி செயல்புரிவதுபோல் தவறாகக் காட்டப்படுவதுண்டு.

அன்றாடப் பயன்பாட்டில் மாந்தவுருவகம்[தொகு]

மொழி, இலக்கியம் போன்றே அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களிலும், கட்டிடங்களிலும், ஓவியக்கலையிலும் மாந்தவுருவகம் தென்படுகிறது. குழந்தைகள் விளையாடுவதற்குத் தரப்படும் பல பொம்மைகள் மாந்தப்பண்புகளேற்றப் பட்டவையாக இருக்கின்றன.

மாந்தவுருவகத்துக்கு எதிரான கருத்துக்கள்[தொகு]

ஆலிசின் அற்புத உலகம் நூலில் "ஐயோ! நேரமாகிவிட்டதே." என்று ஒரு முயல் புலம்புவதாக அமைந்த காட்சிக்காக சான் இடென்னியல் வரைந்த ஓவியம்.[5] விலங்குகளை மனிதரைப்போல் காட்டியதால் சீனாவில் இந்நூல் தடை செய்யப்பட்டது.

பலரும் வெவ்வேறு கரணியங்களுக்காக மாந்தவுருவகத்தை எதிர்த்துள்ளனர். கிரேக்கப்பழங்கதைகளில் கடவுளர்க்கு மனிதப்பண்புகளை ஏற்றியதை பிளேட்டோ அரிசுடாட்டில் போன்ற அறிஞர்கள் தத்தம் நூல்களில் எதிர்த்துள்ளனர். இவர்களின் எதிர்ப்பு "ஒரே கடவுள்" என்ற மெய்யியல் அடிப்படையில் இருந்து வந்தது. சீனோஃவேன் என்ற கிரேக்க மெய்யியலாளர் சிறப்பொச்சும் கடவுள் மனிதனை உருவத்திலோ சிந்தையிலோ எவ்விதத்திலும் ஒத்திருக்கவில்லை என்று குறிப்பிட்டார். இவர்களின் கருத்துக்கும் விவிலியத்துக்கும் ஓரளவு ஒற்றுமை இருந்ததால் பின்னாளில் வளர்ந்த கிறித்தவச் சமயக்கோட்பாடுகள் மீது கிரேக்க மெய்யியல் கோட்பாடுகள் வலுவான விளைவுகளை ஏற்படுத்தின. இசுலாம் சமயத்திலும் இறைவன் மனிதரால் எட்டக்கூடிய இயற்பியல் புரிதல்களுக்கு அப்பாற்பட்டவர் என்ற கருத்து முதன்மையானது. எப்பண்புகளும் இல்லாத பிரம்மம் என்ற இந்து சமயப்பிரிவின் கோட்பாடும் யூத மதத்தின் கோட்பாடுகளும் இக்கருத்துடன் பொருந்தியுள்ளன.

தேவர்கள் அரக்கர்கள் போன்ற இயல்புமீறிய ஆற்றல் கொண்டவர்கள் உண்மையில் இருப்பதாகக் கருதும் பல சமயங்களில் கூட மாந்தர்களுக்குச்சில இறைப்பண்புகள் உள்ளதாகவே எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் கடவுளர்க்கு மனிதப்பண்புகள் உள்ளதாக எடுத்துக்கொள்ளக் கூடாதென்றும் வகுத்துள்ளனர்.

சமயக்கோட்பாடுகள் தவிர பிற கரணியங்களுக்காகவும் மாந்தவுருவகத்தை எதிர்த்துள்ளனர். மனிதர்களைப் பிற விலங்குகளுக்கு இணையாகக் காட்டுவதால் ஆலிசின் அற்புத உலகம் நூலைச் சீனாவின் உணான் பகுதியில் 1931-ம் ஆண்டு தடை செய்தனர்.[6] இயற்கை ஆர்வலர்களில் இடதுசாரியினர் இயற்கையை இறைப்பண்புகளுடனும் மனிதப்பண்புகளுடனும் காட்டுவதால் அதைப்பற்றிய தவறான புரிதல் ஏற்படுகிறது என்று கருதுகின்றனர்.[7] இதனால் இயற்கையின் உறுப்புகளான காடுகள் போன்றவற்றைக் காக்கும் முயற்சிகளுக்கான அறிவியல் தேவைகள் பின்னுக்குத் தள்ளப்படுவதாகவும் இவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். அதனால் இயற்கையை உள்ளது உள்ளபடியே அணுக வேண்டும் என்று கூறுகின்றனர். அதே வேளையில் பிற விலங்குகளில் (குறிப்பாக முதனிகளில்)[8] காணப்படும் உணர்வுகளை ஒட்டுமொத்தமாக மாந்தவுருவகம் என்று ஒதுக்கிவிட முடியாது.[9] படிவளர்ச்சிக் கோட்பாட்டின்படி பிற பாலூட்டிகளுக்கும் மாந்தருக்கும் கருவான வேறுபாடுகள் இல்லை என்பது அறிஞர்களின் கருத்து.[10] இக்கருத்துக்கு வலுச்சேர்க்கும் வண்ணமாக பல விலங்குகளில் மகிழ்ச்சி, அச்சம், அன்பு, நம்பிக்கை இழப்பு, துயரம் போன்ற உணர்வுகள் அறியப்பட்டுள்ளன.[11] ஆக, இவை மாந்தருக்கு மட்டும் உரித்தானவையாக இல்லாமல் படிவளர்ச்சியில் தேர்ந்து ஊர்வன, பாலூட்டிகள் என பல நிலைகளில் சேர்ந்த உணர்வுகள் என்றே கொள்ளலாம்.[12] இவ்வுணர்வுகள் தென்படும் கண்ணீர்விடும் ஒட்டகத்தின் கதை,[13] அரிமா மான் குட்டியைத் தத்து எடுத்துக் கொண்டது, குரங்கு குறுகுறுப்படைவது[14] போன்ற நிகழ்வுகளை ஆவணப்படங்களில் பதிந்துள்ளனர்.

குறிப்புகளும் மேற்கோள்களும்[தொகு]

  1. Barrett, J. L.; Keil, F. C. (1996). "Conceptualizing a Nonnatural Entity: Anthropomorphism in God Concepts". COGNITIVE PSYCHOLOGY 31 (3): 219-247. பன்னாட்டுத் தர தொடர் எண்:0010-0285. http://www.yale.edu/cogdevlab/People/Lab_Members/Frank/Frank's%20papers%20pdfs%20/Frank's%20articles/conceptualizingnonnaturalentity.pdf. 
  2. The origins of writing, டிஸ்கவரி தொலைக்காட்சி (1998-12-15)
  3. சிலப்பதிகாரம். பக். 190 இம் மூலத்தில் இருந்து 2012-12-06 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121206074213/http://www.chennailibrary.com/iymperumkappiangal/silapathikaram41.html. பார்த்த நாள்: 2008-10-10. 
  4. வாட்டர்சன், பில் (1995). The Calvin and Hobbes Tenth Anniversary Book. Andrews McMeel Publishing. பக். 29. ISBN 978-0-8362-0438-4. "மீன்துண்டுரொட்டியுடன் வைத்த பொறியில் ஆபுசு சிக்கிவிடுகையில், கால்வின் புலிகள் அந்த உரொட்டிக்காக எது வேண்டுமானாலும் செய்வன என்பான். "ஆம், புலிகளாகிய நாங்கள் அந்த அளவிற்கு மூடர்களே" என்று ஆபுசு கூறுவதாக அமைந்ததே கால்வினும் ஆபுசும் படக்கதையின் முதல் காட்சி" 
  5. கரோல், இலூயி. "முயல் பொந்தின் உள்ளே". ஆலிசின் விந்தை உலகம். பக். 1. ISBN 0-553-21345-8. 
  6. Kenneth Specer Research Library, University of Kansas: http://spencer.lib.ku.edu/exhibits/bannedbooks/variouscountries.html பரணிடப்பட்டது 2008-07-05 at the வந்தவழி இயந்திரம்
  7. "அணிந்துரை (க. யோகானந்த்)". இயற்கை: செய்திகள் சிந்தனைகள். பொள்ளாச்சி: இயற்கை வரலாறு அறக்கட்டளை. பக். 11. 
  8. Also in captivity: "A thoroughgoing attempt to avoid anthropomorphic description in the study of temperament was made over a two-year period at the Yerkes laboratories. All that resulted was an almost endless series of specific acts in which no order or meaning could be found. On the other hand, by the use of frankly anthropomorphic concepts of emotion and attitude one could quickly and easily describe the peculiarities of individual animals... Whatever the anthropomorphic terminology may seem to imply about conscious states in chimpanzee, it provides an intelligible and practical guide to behavior." Donald O. Hebb (1946). "Emotion in man and animal: An analysis of the intuitive processes of recognition.". Psychological Review 53: 88–106. https://archive.org/details/sim_psychological-review_1946-03_53_2/page/88. 
  9. Frans de Waal (1997-07). "Are We in Anthropodenial? (நாம் மாந்தப் பண்புகளைத் [தேவைக்கதிகமாக] மறுத்துக் கொண்டிருக்கிறோமா?)". Discover. pp. 50–53.
  10. திக்சன், பெத்து ஏ. (Summer 1999). "Good Natured: The Origins of Right and Wrong in Humans and Other Animals (Review)". Human Ecology Review 6 (1): 67. http://www.humanecologyreview.org/Human%20Ecology/HER_6,1,1999.pdf#page=67. 
  11. பெர்க்காஃவு, மார்க்கு (அக்டோபர் 2000). Animal Emotions: Exploring Passionate Natures (விலங்குணர்வுகள்: உணர்வுமிகுதியான இயல்புகளை ஆய்தல்). 50. பக். 861–870. http://direct.bl.uk/bld/PlaceOrder.do?UIN=086743437&ETOC=RN. [தொடர்பிழந்த இணைப்பு]
  12. Wright, Robert (1995). "Darwinian (and Freudian) cynicism". The Moral Animal: Why We Are The Way We Are: The New Science Of Evolutionary Psychology. New York: Vintage Books. பக். 321. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-679-76399-6. https://archive.org/details/moralanimalevolu00wrig. பார்த்த நாள்: 2011-04-30. "[Paul D. MacLean] calls the human brain a "triune" brain whose three basic parts recapitulate our evolution: a reptilian core (the seat of our basic drives), surrounded by a "paleomammalian" brain (which endowed our ancestors with, among other things, affection for offspring), surrounded in turn by a "neomammalian" brain. The voluminous neomammalian brain brought abstract reasoning, language, and perhaps, (selective) affection for people outside the family. … Like many neat models, this one may be misleadingly simple; but it nicely captures a (perhaps the) critical feature of our evolutionary trajectory: from solitary to social, with the pursuit of food and sex becoming increasingly subtle and elaborate endeavors." 
  13. "The Story of the Weeping Camel". National Geographic World Films (in மங்கோலியம்). National Geographic. Archived from the original on 2009-08-15. பார்க்கப்பட்ட நாள் 2009-08-02. {{cite web}}: Cite has empty unknown parameter: |coauthors= (help)CS1 maint: unrecognized language (link)
  14. "Beautiful People". IMDB. பார்க்கப்பட்ட நாள் 2011-04-27.

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Anthropomorphism
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மாந்தவுருவகம்&oldid=3583119" இலிருந்து மீள்விக்கப்பட்டது