தன்மை நவிற்சி அணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தன்மை நவிற்சி அணி என்பது எவ்வகைப் பொருளையும் அல்லது எச்செயலையும் உண்மையான முறையில் உள்ளபடி உள்ளதாக விளக்கும் சொற்களைக் கொண்டு பாடப்படுவது ஆகும். இதற்கு இயல்பு நவிற்சி அணி, தன்மையணி என வேறு பெயர்களும் உண்டு.

எடுத்துக்காட்டு[தொகு]

"உள்ளம் குளிர்ப்ப ரோமம் சிலிர்க்க உரை
தள்ள விழி நீர் அரும்ப"
தன்னையே மறந்து நின்றாள் -

என்னும் பாடல் பகுதியில்
- நெஞ்சம் குளிர - ரோமம் சிலிர்க்க- வார்த்தை வராமல் தடுமாற- விழிநீர் சிந்த- தன்னை மறந்து நின்றாள் என்று எந்த உவமானமோ உவமேயமோ அன்றி மிகைப்படுத்தலோ இல்லாததைக் காண முடிகிறது. இவ்வாறு கூறுவது தன்மை அணி.

தன்மை நவிற்சி அணியின் தன்மைகள்[தொகு]

  • உள்ளதை உள்ளபடி இயல்பாகக் கூறும்
  • மிகைப்படுத்தல் இருக்காது
  • உதாரணம் இருக்காது
  • உருவகப் படுத்தல் இருக்காது
  • சொல்வதில் அணிக்கேயுரிய அழகு காணப்படும்

எ.கா.1[தொகு]

இருந்து முகந்திருத்தி ஈரோடு பேன் வாங்கி
விருந்து வந்ததென்று விளம்ப - வருந்தி
ஆடினாள் பாடினாள் ஆடிப் பழமுறத்தால்
சாடினாள் ஓடோடத் தான்

இருந்து
முகந் திருத்தி
ஈரோடு பேன் வாங்கி
விருந்து வந்ததென்று விளம்ப
வருந்தி ஆடினாள்
பாடினாள்
ஆடிப் பழமுறத்தால் சாடினாள்
ஓடோடத்தான்
மேலே உள்ள கவிதை வரிகளில் கீழே காட்டப்பட்டுள்ளவாறு உருவக அணியோ உவமை அணியோ இல்லாததைக் காண முடிகிறது.

எ.கா.2[தொகு]

மெய்யில் பொடியும் விரித்த கருங்குழலும்
கையில் தனிச் சிலம்பும் கண்ணீரும்

மெய்யில் பொடியும் = உடம்பு முழுக்கத் தூசியும்
விரித்த கருங்குழலும் = விரித்த தலைமயிரும்
கையில் தனிச் சிலம்பும் = கையிலே தனிச்சிலம்பும்
கண்ணீரும் = அழுகையும்
கண்ணகியின் கோலத்தை விளக்கும் கவிதையில் உள்ள இந்த வரிகளில் ஒவ்வொன்றும் இயல்பாகவும், மிகைப்படுத்தல் இன்றியும் அதே நேரம் அழகு குன்றாமலும் இருப்பதைக் காணமுடிகிறது.

எ.கா.3[தொகு]

'உள்ளம் குளிர உரோமம் சிலிர்த்துரையும்
தள்ளவிழி நீரரும்பத் தன்மறந்தாள் - புள்ளலைக்கும்
தேந்தா மரைவயல்சூழ் தில்லைத் திருநடஞ்செய்
பூந்தா மரைதொழுத பொன்'

தில்லையில் நடராசப் பெருமானின் பாதங்களைத் தொழுத பெண்ணொருத்தியின் நிலை உள்ளது உள்ளவாறே கூறப்பட்டுள்ளமை காண்க.


"https://ta.wikipedia.org/w/index.php?title=தன்மை_நவிற்சி_அணி&oldid=3201231" இலிருந்து மீள்விக்கப்பட்டது