லாலா லஜபதி ராய்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
லாலா லஜபத் ராய்

பஞ்சாப் சிங்கம்
பிறந்த இடம்: ஃபெரோசுப்பூர், பஞ்சாப், இந்தியா
இயக்கம்: இந்திய விடுதலை இயக்கம்
முக்கிய அமைப்புகள்: இந்திய தேசிய காங்கிரசு, ஆரிய சமாசம்
இந்திய விடுதலை இயக்கத் தலைவர்களான லாலா லஜபதி ராய், பால கங்காதர திலகர் மற்றும் பிபின் சந்திர பால்

லாலா லஜபதி ராய் ஒரு எழுத்தாளரும் அரசியல் தலைவரும் ஆவார். இந்திய விடுதலைப் போராட்டத்தில் இவரது பங்குக்காக இவர் பெரிதும் மதிக்கப்படுகிறார். இவரை மக்கள் பஞ்சாப் சிங்கம் எனவும் அழைப்பதுண்டு. லால்-பால்-பால் என்று அழைக்கப்படும் மூன்று முக்கியத் தலைவர்களுள் இவரும் ஒருவராவார். மற்ற இருவர் பால கங்காதர திலகர் மற்றும் பிபின் சந்திர பால் ஆவர். 'லாலா லஜபத் ராய்' பஞ்சாப் தேசிய வங்கி மற்றும் "லட்சுமி காப்புறுதி கம்பெனி" ஆகியவற்றை நிறுவியவரும் ஆவார்.

இளமைக்காலம்

  • லாலா லஜபதி ராய், 1865 ஆம் ஆண்டு சனவரி 28 ஆம் தேதி, இந்தியாவின் பஞ்சாப் மாகாணத்தில், இன்றைய மோகா மாவட்டத்தில் அமைந்திருக்கும் துதி கே என்னும் ஊரில் பிறந்தார். இவரது பெற்றோர், முன்சி ராதா கிசான் ஆசாத், குலாப் தேவி ஆகியோர் ஆவர். இவர்கள் அகர்வால் பனியாட்கள். சிலர் இவர்களை சமணர்கள் என்கிறார்கள். இந்து சமயம் மற்றும் சமணம் ஆகியவற்றோடு தொடர்புகளைக் கொண்டிருந்த இவரது தந்தையார் இசுலாம் மதத்துக்கு மாறிப் பின்னர் மீண்டும் இந்துவானார். லாலா லஜபத் தனது இளமைக் காலத்தின் பெரும் பகுதியை பஞ்சாப்பின் லூதியானா மாவட்டத்தில் உள்ள, 'ஜாக்ராவோன்' என்னும் இடத்தில் கழித்தார். இன்னும் ஜாக்ராவோனில் இருக்கும் இவர் வாழ்ந்த வீடு இப்போது ஒரு நூல்நிலையமாகவும் மற்றும் அருங்காட்சியகமாகவும் விளங்குகிறது.

அரசியல் வாழ்க்கை[தொகு]

இவர் 1888 ஆம் ஆண்டில் இந்திய தேசிய காங்கிரசில் சேர்ந்தார். அக்காலத்தில், தீவிரமான இந்து தேசியவாதிகளாக விளங்கிப் போராட்டக் காலத்திலேயே தமது உயிர்களைக் கொடுத்த முக்கியமான மூவருள் இவரும் ஒருவர். ஏனையோர் மகாராட்டிரத்தைச் சேர்ந்த பால கங்காதர திலகரும், வங்காளத்தைச் சேர்ந்த பிபின் சந்திர பாலும் ஆவர். கூட்டாக இம்மூவரையும் லால்-பால்-பால் என அழைப்பர். ராய், இன்றைய இந்து தேசியவாதக் கட்சியான பாரதீய ஜனதா கட்சியின் முன்னோடியான இந்து மகாசபையின் உறுப்பினராகவும் இருந்தார்.

1905 ஆம் ஆண்டின் வங்காளப் பிரிவினை இவரது தேசிய உணர்வைத் தூண்டியதுடன், விடுதலைக்காகப் போராடும் பாதையில் அவரை உறுதியாக நிற்கவும் வைத்தது. பிரித்தானிய அரசின் அடக்கு முறைகள், மக்கள் மத்தியில் தேசிய எழுச்சியையும், தன்மான உணர்வையும் தூண்டுவதில் அவர்களுக்கு மன உறுதியைக் கொடுத்தது. லாலா உள்ளிட்ட முன் குறிப்பிட்ட மூவரும், பிரித்தானியரிடம் இருந்து ஓரளவு தன்னாட்சியைக் கோரினர். இது அக்காலத்தில் புரட்சிகரமானதாகக் கருதப்பட்டது. முழுமையான அரசியல் விடுதலையை முதன் முதலில் கோரியவர்களும் இவர்களே.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=லாலா_லஜபதி_ராய்&oldid=3924421" இலிருந்து மீள்விக்கப்பட்டது