தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையம் இந்தியாவில் ஏற்படக் கூடிய இயற்கைப் பேரழிவுகள் முதல், உயிரியல், ரசாயன, அணுக் கதிரியக்கம் முதலான எல்லா வகைப் பேரழிவுகளையும் சமாளிக்கும் வழிமுறைகளையும் நடவடிக்கைகளையும் மேற்கொள்ள உருவாக்கபட்ட ஆணையமாகும்.

தோற்றம்[தொகு]

இந்திய அரசாங்கம் பேரிடர் மேலாண்மையை தேசிய முன்னுரிமையாக அங்கீகரித்து ஆகஸ்ட் 1999ல் ஓர் உயர் ஆற்றல்மிக்க குழுவை (High-Powered Committee) அமைத்தது. 2001 குஜராத் பூகம்பத்திற்கு பிறகு பேரிடர் மேலாண்மை திட்டமிடல் குறித்தும் தடுப்பு வழிமுறைகள் குறித்தும் பரிந்துரைகளை செய்ய ஒரு தேசிய குழு அமைக்கப்பட்டது. பத்தாவது ஐந்தாண்டு திட்ட ஆவணத்திலும், முதல் முறையாக, பேரிடர் மேலாண்மை தொடர்பாக ஒரு விரிவான அத்தியாயம் இருந்தது. இதேபோல், பன்னிரண்டாவது நிதி ஆணையம் பேரிடர் மேலாண்மையின் நிதி ஏற்பாடுகளை ஆய்வு செய்ய உரிமைக் கட்டளை இடப்பட்டது. 23 டிசம்பர் 2005 அன்று, இந்திய அரசு, பேரிடர் மேலாண்மை சட்டம் இயற்றியது. இதன் அடிப்படையில், பிரதமர் தலைமையில் தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டது.[1]

தேசியப் பேரழிவு மீட்புப் படை[தொகு]

தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையதின் கீழ் தேசியப் பேரழிவு மீட்புப் படை அமைக்கப்பட்டுள்ளது. உடனடி மீட்பு நடவடிக்கைக்காக நாடு முழுவதும் 10 பட்டாலியன் படைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இப்படையில் பயிற்சி பெற்ற வீரர்கள் மொத்தம் 10,400 பேர் உள்ளனர். அதில் ஒரு பட்டாலியன் தமிழகத்தில் அரக்கோணத்திலும் அமைக்கப்பட்டுள்ளது.[2]

தேசியப் பேரழிவு மீட்புப் படை அமைவிடங்கள்
நகரம் மாநிலம்
காசியாபாத் உத்தரப் பிரதேசம்
பட்டியாலா பஞ்சாப்
கொல்கத்தா மேற்கு வங்காளம்
குவஹாத்தி அசாம்
கட்டாக் ஒடிசா
அரக்கோணம் தமிழ்நாடு
புனே மகாராட்டிரம்
காந்திநகர் குசராத்து
பட்னா பீகார்
குண்டூர் ஆந்திரப் பிரதேசம்

குறைநிறை காணல்[தொகு]

2008-ல் அமைக்கப்பட்டதிலிருந்து 2012 வரை இந்த ஆணையத்தின் தேசிய செயற்குழு ஒரு முறைகூடக் கூடியதில்லை என்று இந்தியத் தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் தனது 2013 அறிக்கையில் குற்றம் சாட்டினார் .தேசிய அமைப்பின் கீழ் ஒவ்வொரு மாநிலத்திலும் பேரிடர் மேலாண்மை ஆணையங்கள் ஏற்படுத்த வேண்டும் என்று சட்டம் இயற்றப்பட்டது. ஆனால் பீகார், குஜராத், ஒடிசா உட்பட ஏழு மாநிலங்களைத் தவிர,வேறு எந்த மாநிலத்திலும் இந்த ஆணையம்கூட அமைக்கப்படவில்லை என்கிறது இவ்வறிக்கை. எல்லா மாநிலங்களிலும் பேரிடர் வந்தால் அதைச் சமாளிப்பதற்கான தனிப் படை அமைக்கப்பட வேண்டும் என்பது சட்டம். இதை ஒரு மாநிலம்கூடச் செய்யவில்லை.[3]தணிக்கை அறிக்கை வந்து ஒரு வருடம் ஆகியும் எந்த நடவடிக்கையும் இல்லாத நிலையில், செப்டம்பர் 2013இல் உச்ச நீதிமன்றத்தில், தொண்டு நிறுவனங்களால் ஒரு பொது நல வழக்கு போடப்பட்டது. இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட நீதிமன்றம் ஒன்றிய அரசு, உத்தராகண்ட், ஆந்திரம், குஜராத், ஒடிசா, மகாராஷ்டிரம், ராஜஸ்தான் மேற்கு வங்கம் , தமிழகம் ஆகிய மாநில அரசுகள், தேசிய ஆணையம் ஆகியவற்றுக்கு நோட்டீஸ் அனுப்பியது.[4]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Evolution of NDMA". Archived from the original on 2013-11-29. பார்க்கப்பட்ட நாள் 16 அக்டோபர் 2013.
  2. "பேரழிவு சவால்களை விழிப்புணர்வால் எதிர்கொள்ளலாம்!". தினமணி. 30 August 2013. http://dinamani.com/weekly_supplements/sunday_kondattam/2013/08/30/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A3/article1759600.ece. பார்த்த நாள்: 16 அக்டோபர் 2013. 
  3. "பேரிடர்! மேலாண்மை?". தி இந்து. 16 அக்டோபர் 2013. http://tamil.thehindu.com/opinion/columns/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88/article5239556.ece. பார்த்த நாள்: 16 அக்டோபர் 2013. 
  4. "SC asks Centre, NDMA to respond to PIL on disaster management". Business Standard. செப்டம்பர் 23, 2013. http://www.business-standard.com/article/pti-stories/sc-asks-centre-ndma-to-respond-to-pil-on-disaster-management-113092300953_1.html. பார்த்த நாள்: 16 அக்டோபர் 2013. 

வெளி இணைப்புகள்[தொகு]