திருமண அறிக்கை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

திருமண அறிக்கை அல்லது திருமண ஓலை அல்லது திருமண ஓலை எழுதுவது என்பது பல கிறித்தவ சபைகளில் மண ஒப்பந்தம் செய்த பின், திருமணம் செய்யும் மணமக்களின் குறிப்புகளை பொது அறிவிப்பாக வெளியிடுவதைக்குறிக்கும். இது கிறித்தவ ஆலயங்களிலோ, அல்லது சபையின் சுற்றறிக்கையிலோ வெளியிடப்படலாம். இப்பழக்கம் சட்ட முறைமைப்படி இங்கிலாந்து திருச்சபையில் இன்றும் திருமணம் செய்ய கட்டாயமானதாகும். கத்தோலிக்க திருச்சபையில் இப்பழக்கம் 1983க்குப்பின் கட்டாயமற்றதாக்கப்பட்டது. நீதியான உள்நாட்டு சட்டம், திருச்சபையின் சட்டம் ஆகியவற்றில் குறிப்பிடப்பட்டுள்ள செல்லாத்தன்மையுடைய திருமணங்களை தடுப்பதற்காக இது வழக்கில் வந்தது. முன்னரே திருமணமானவர்கள், கற்பு வாக்களித்தவர்கள், முழு ஒப்புதல் இல்லாமல் கட்டாயப்படுத்தி செய்யப்படும் திருமணம், இரத்த உறவுகளிக்கிடையேயான திருமணம் முதலியன செல்லாத்தன்மையுடையவை ஆகும்.

கத்தோலிக்க திருச்சபை[தொகு]

2007இல் இயற்றப்பட்ட திருமண அறிக்கை ஒன்று

முதன் முதலில் செல்லாத்தன்மையுடைய திருமணங்களை தடுப்பதற்காக இவ்வழக்கம் நான்காம் லாத்திரன் பொதுச்சங்கத்தின் ஆணையால் 1215ஆம் ஆண்டு வழக்கில் வந்தது. அதுவரை வெகு சில இடங்களிலேயே இப்பழக்கம் இருந்தது.[1] கத்தோலிக்க திருச்சபையில் மரபுப்படி வாசக வேடையிலிருந்து திருமண ஓலை அறிவிக்கப்படும். 1983க்கு முன்னர் மணமக்கள் இருவரின் தாய் பங்குகளிலும் தொடர்ந்து மூன்று ஞாயிற்றுக்கிழமைகளிலோ அல்லது கடன் திருநாட்களிலோ வாசிக்கப்படும்.[2] 1983க்கு பின்வந்த திருச்சபைசட்டத்தில் திருமண அறிக்கை குறித்த விதிமுறைகளை வகுக்க ஒரு நாட்டின் ஆயர் பேரவைக்கு அதிகாரம் அளிக்கப்பட்டது.[3] உலகமயமாக்கலால் திருமணம் இடையூறுகளை விசாரிக்க திருமண அறிக்கை பயனளிக்காததால் கத்தோலிக்க திருச்சபை, 1983இல் இவ்விதியினை நீக்கியது. எனினும், இந்தியா உட்பட பல நாடுகளில் ஆயர் பேரவையின் கட்டாயச் சட்டமாக இது இயற்றப்பட்டுள்ளது.

வழக்கங்கள்[தொகு]

மிகவும் நெருங்கிய உறவினரோடு பங்குத்தந்தையினை அனுகி மனமக்களின் பெற்றோர் தத்தம் பகுதியில் திருமண அறிக்கையினை பதிவு செய்வர். இப்பதிவில் திருமண செல்லும் தன்மையினை பாதிக்கும் எதுவும் இல்லை என உறுதிமொழி சான்றில் கையொப்பம் இடுவர். பின்னாட்களில் வரும் மூன்று ஞாயிற்றுக்கிழமைகளிலோ அல்லது கடன் திருநாட்களிலோ திருப்பலியின் போது வேதியரோ அல்லது பங்குகுருவோ இதனை அறிவிப்பர். இவ்வறிவிப்பு பின் வரும் வடிவில் இருக்கும்:

<பங்கு பெயர்> பங்கினைச்சேர்ந்த <மணமகனின் பெற்றோர் பெயர்>இன் மகனாகிய <மணமகன் பெயர்>க்கும், <பங்கு பெயர்> பங்கினைச்சேர்ந்த <மணமகளின் பெற்றோர் பெயர்>இன் மகளாகிய <மணமகள் பெயர்>க்கும், திருமணம் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இதில் ஏதேனும் தடையிருந்தால் பங்கு குருவுக்கு அறிவிப்பது ஒவ்வொருவரின் கடமையாகும்.

இந்தியா உட்பட சில இடங்களில் மூன்றாம் கால் இரத்த உறவுமுறையில் (மாமன் மகள்) திருமணம் செய்யவது வழக்கில் உள்ளது. அத்தகைய திருமணத்திற்கு ஆயரின் அனுமதி தேவை. அத்தகைய அனுமதி பெற்றிருப்பின் பின் வரும் சொற்றொடர் சேர்க்கப்படும்:

மூன்றாம் கால் இரத்த உறவு அனுமதி பெற்றது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "The Canons of the Fourth Lateran Council, 1215". பார்க்கப்பட்ட நாள் 2012-03-12.
  2. Waterworth, The Canons and Decrees of the Sacred and Œcumenical Council of Trent, London, 1848, p. 196
  3. திருச்சபை சட்டம் 1067
"https://ta.wikipedia.org/w/index.php?title=திருமண_அறிக்கை&oldid=1517434" இலிருந்து மீள்விக்கப்பட்டது