அல்-அகீலா சண்டை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எல் அகீலா சண்டை
மேற்குப் பாலைவனப் போர்த்தொடரின் பகுதி

வடக்கு ஆப்பிரிக்க களத்தில் அச்சுப் படைகளின் பின்வாங்கல்
நாள் 11–18 டிசம்பர் 1942
இடம் எல் அகீலா, லிபியா
அச்சுப் படைகளின் பின்வாங்கல்
பிரிவினர்
 ஐக்கிய இராச்சியம்
 போலந்து
 நியூசிலாந்து
 ஜெர்மனி
 இத்தாலி
தளபதிகள், தலைவர்கள்
ஐக்கிய இராச்சியம் ஹரால்ட் அலெக்சாந்தர்
ஐக்கிய இராச்சியம் பெர்னார்ட் மோண்ட்கோமரி
நாட்சி ஜெர்மனி எர்வின் ரோம்மல்

எல் அகீலா சண்டை (Battle of El Agheila) இரண்டாம் உலகப் போரின் வடக்கு ஆப்பிரிக்கப் போர் முனையில் நிகழ்ந்த ஒரு சண்டை. இது மேற்குப் பாலைவனப் போர்த்தொடரின் ஒரு பகுதியாகும். தளபதி எர்வின் ரோம்மல் தலைமையிலான அச்சுப் படைகள் எல் அலாமீனிலிருந்து துனிசியாவிற்கு பின்வாங்கிச் செல்லும் போது அவற்றுக்கும் நேச நாட்டுப் படைகளுக்கும் இம்மோதல் நிகழ்ந்தது.

நவம்பர் முதல் வாரம், 1942ல் இரண்டாம் எல் அலாமீன் சண்டையின் இறுதி கட்டத்தில் தோல்வி உறுதி என்று தெரிந்த பின்னர் ரோம்மல் தன் படைகளைப் பின்வாங்க உத்தரவிட்டார். பெரும் பலத்துடன் அவரது படைகளை விரட்டி வந்த நேச நாட்டுப் படைகள் விடாது தாக்கின. மேற்குப் பாலைவனப் போர்த் தொடரில் முன்பு நிகழ்ந்த பின்வாங்கல்களைப் போல இம்முறை கட்டம் கட்டமாகப் பின்வாங்க முடியாது என்பதை உணர்ந்த ரோம்மல் நேராக எல் அகீலா அரண்நிலைகளைக்குப் பின்வாங்க முடிவு செய்தார். நவம்பர் 7ம் தேதி மெர்சா மாத்ரூ, 9ம் தேதி சிடி பர்ரானி, 11ம் தேதி ஆலஃபாயா கணவாய் ஆகிய அரண்நிலைகளை அச்சுப் படைகள் காலி செய்தன. நவம்பர் 13ம் தேதி டோப்ருக் நகரம் நேச நாட்டுப் படைகளிடம் வீழ்ந்தது. இதே போல டெர்னா நவம்பர் 15ம் தேதியும் பெங்காசி அதற்கு ஐந்து நாட்கள் கழித்தும் நேச நாட்டுப் படைகளால் கைப்பற்றப்பட்டன.

மெர்சா பார்கா, எல் அகீலா நிலைகளை அடைந்த ரோம்மலின் படைகள் அவற்றைப் பலப்படுத்தின. முன்பு இரு முறை மேற்கு ஆப்பிரிக்கப் போர்த்தொடரில் நிகழ்ந்தது போல், இம்முறை வேகமாக முன்னேறி ரோம்மலின் படைகளால் எதிர்த்தாக்குதலுக்குள்ளாவதை மோண்ட்கோமரி விரும்பவில்லை. எனவே உடனே எல் அகீலா நிலையைத் தாக்காமல், சில வாரங்கள் தன் படைப்பிரிவுகளுக்கு ஓய்வு கொடுத்தார். கடல் வழியாக எல் அகீலா நிலையின் பின்புறம் படைப்பிரிவுகளை தரையிறங்கச் செய்து அச்சுப் படைகளை சுற்றி வளைக்கத் திட்டமிட்டார். டிசம்பர் 11/12 ம் தேதிகளில் சண்டை மீண்டும் தொடங்கியது. ஆனால் எல் அகீலா சுற்றி வளைக்கப்படும் அபாயத்தை அறிந்த ரோம்மல் லிபியாவை விட்டு தன் படைகளைப் பின்வாங்கி துனிசியாவுக்குச் செல்ல உத்தரவிட்டார். இதனால் எல் அகீலாவில் சிறிய அளவு மோதல்களே ஏற்பட்டன. ஆனால் இத்துட்டன் இரு ஆண்டுகளுக்கு மேலாக லிபியாவில் நடந்த வந்த மோதல்கள் முடிவடைந்தன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=அல்-அகீலா_சண்டை&oldid=1359501" இலிருந்து மீள்விக்கப்பட்டது