தடய அறிவியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தடய அறிவியல்
ஆர்க்கிமிடீசு தங்க கிரீடமானது தங்க கட்டியை விட அடர்த்தி குறைவானதா என்பதைக் கண்டறிய தனது மிதப்பு பற்றிய கோட்பாட்டை பயன்படுத்தியிருக்கக்கூடும்.

தடய அறிவியல் அல்லது தடயவியல் (forensic science) என்பது அறிவியலின் உதவியுடன் குற்றச்செயல்களை ஆராயும் ஓர் துறையாகும். குற்றம் நடந்த இடத்தில் கிடைக்கும் தடயங்களை எடுத்து, அவற்றை சோதனைச் சாலைகளில் ஆராய்ந்து, நீதிமன்றத்தில் தாக்கல் செய்யும் அளவிலான சாட்சியங்களாக தடயவியல் வல்லுனர்கள் மாற்றுகின்றனர். குருதி, எச்சில், மயிர், வாகனச் சக்கரங்கள் மற்றும் காலணிகளின் அச்சு, கைரேகை, காலடி தடங்கள் வெடிபொருட்கள், உடலின் பிற திரவங்கள், மதுபானங்கள் போன்றவற்றை தடய அறிவியல் நிபுணர்கள் ஆய்வு செய்து முக்கியமான துப்புகளைத் தருகின்றனர். அறிவியல் பூர்வமான ஆதாரங்களாக இவை அமைகின்றன. இது தவிர கையெழுத்து மோசடிகள் குறித்து ஆராய்வதும் இத்துறையில் அடங்கும். வழக்குகளை தீர்க்க உதவும் தகவல்களைச் சேகரித்து தடயவியல் வல்லுனர்கள் காவல்துறைக்கு உதவுகின்றனர். மருந்தியல், சோதனை, கள அறிவியல் என்ற மூன்று வகையில் தடவியல் பணி அமைகிறது. காவல்துறை, சட்ட அமலாக்கத் துறை, பல்வேறு வகையான சட்ட அமைப்புகள், அரசு மற்றும் தனியார் துப்பறியும் நிறுவனங்கள் முதலியன தடய அறிவியல் துறையை நாடுகின்றன.[1] தற்காலத்தில் பெண் தடய அறிவியல் ஆய்வாளர்களும் இப்பணியில் ஈடுபடுகின்றனர்.[2]

பணிகள்[தொகு]

அமெரிக்க இராணுவ குற்றப் புலனாய்வு பிரிவு முகவர்கள் குற்றம் நடந்த இடத்தை ஆய்வு செய்கின்றனர்.
Police forensic investigation in Ashton-under-Lyne, England, using a tent to protect the crime scene

இன்று நவீன தொழில்நுட்ப உதவியுடன் மேற்கொள்ளப்படும் சைபர் குற்றங்கள், மருத்துவத்திற்காக பயன்படுத்தப்படும் மருந்துகளை கொண்டு நடத்தப்படும் குற்றங்கள் என குற்றத்தின் வளர்ச்சிக்கேற்ப இந்தக் குற்றங்களைக் கண்டறிய காவல்துறைக்கும், நீதித்துறைக்கும் உதவியாக இருப்பது தடய அறிவியல் ஆகும். கொலை, பாலியல் ரீதியான தொந்தரவுகளை டி.என்.ஏ மூலம் கண்டறிவது, குண்டுவெடிப்பு நடைபெற்ற இடங்களில் கிடைக்கும் தடயங்களை வைத்து அது எந்த மாதிரியான குண்டு என்று கண்டறிவது, ஒரு சில வழக்குகளில் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி அல்லது ஆயுதம் எந்த வகையைச் சேர்ந்தது என்பது பற்றிய பல்வேறு முக்கிய தடயங்களை கண்டறிய தடய அறிவியல் வெகுவாக உதவி வருகிறது. பெண்களுக்கு எதிரான கொடுமைகள், போதைப் பொருட்கள் பயன்பாடு போன்ற குற்றங்களைக் கண்டுபிடிப்பதிலும், தடய அறிவியலின் பங்களிப்பு மகத்தானதாக இருந்து வருகிறது.

தடய அறிவியல் துறையின் பயன்பாடுகள்[தொகு]

நடந்த குற்றத்தில் நீதியை நிலைநாட்டுவதற்கு, உண்மையை கண்கண்டறிதல், சரியான நபர்களை அடையாளம் காணுவதற்குத் தேவையான தடயங்களை எடுத்து அறிவியல் பூர்வமாக நிரூபித்தல் ஆகியவை தடய அறிவியலின் பணியாகும். மேலும் தடயவியல் வல்லுநர்கள் நேரடியாக எந்த வழக்கிலும் நுழைய முடியாது. காவல் துறை இவர்களது தேவையை கருதி அழைக்கும் போது குற்றம் நடந்த இடத்துக்கு செல்வர். குறிப்பிட்ட குற்றத்துக்கு என்று மட்டுமல்லாமல் கொலை, கொள்ளை, கற்பழிப்பு, குண்டுவெடிப்பு, விபத்தில் இறந்த மற்றும் சிதைந்த உடல்களை அடையாளம் காண்பது உள்ளிட்ட அனைத்து பணிகளையும் தடய அறிவியல் துறை மேற்கொள்கிறது.[3]

தடயவியல் நிபுணரின் தகுதிகள்[தொகு]

  • தடய அறிவியலில் நிபுணருக்குத் தனித்திறனும், தடயங்களை மூன்றாம் கோணத்தில் பார்க்கும் அறிவும் தேவைப்படும்.
  • தருக்க சிந்தனையும், ஆர்வமும் உள்ளவராக இருக்க வேண்டும்.
  • இயற்பியல் அல்லது உயிரியல் பாடப் பிரிவில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.
  • புள்ளியியல் தொடர்பான விவரங்களும் அறிந்திருப்பது பயன்தரும்.
  • விசாரணையின் போது நடுநிலைமை வகிப்பதும், மனப்பற்றின்மை இல்லாதவராக இருப்பதும் தடயவியல் நிபுணருக்குரிய இன்றியமையாத தகுதிகளில் ஒன்று.[4]

பிரிவுகள்[தொகு]

தடய அறிவியலில் பல்வேறு பிரிவுகள் உள்ளன. அவைகளுள் சில:

தமிழகத்தில் தடய அறிவியல்[தொகு]

ஆசியாவிலே சென்னையில் தான் முதன்முதலில் (1849-ம் ஆண்டு) தடய அறிவியல் துறை ஆரம்பிக்கப்பட்டது. சென்னை உட்பட ஒன்பது மண்டல அலுவலங்கள் இருக்கிறது. மேலும் 33 இயங்கும் தடய அறிவியல் (Mobile Forensic Science Laboratory) அலுவலகங்கள் இருக்கிறது. சென்னை அலுவலகத்தில் மட்டும் அனைத்து 14 சோதனைகளையும் செய்யும் வசதி இருக்கிறது.[3]

இந்திய கல்வி நிறுவனங்கள்[தொகு]

இந்தியாவில் நாடு முழுவதும் உள்ள பல்வேறு பல்கலைக்கழகங்களில் தடயவியல் தொடர்பான கல்விகள் வழங்கப்படுகின்றன.

  • மணிப்பூர் பல்கலைக்கழகத்தில் தடயவியல் அறிவியல் தொடர்பான மூன்றாண்டு பி.எஸ்சி. படிப்பு வழங்கப்படுகிறது.
  • தில்லி பல்கலைக்கழகத்தில் குற்றத்தடயவியல் மாந்தவியல் (Forensic Anthropology) பிரிவில் பட்டயப்படிப்பு அளிக்கப்படுகிறது.
  • கர்நாடக பல்கலைக்கழகத்தில் (Karnatak University) பட்டப்படிப்பு பயிலும் மாணவர்களுக்கு குற்றவியல் மற்றும் கைரேகை அறிவியல் (Criminology and Forensic Science) விருப்பப் பாடமாகத் தேர்வு செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது.
  • தமிழ்நாட்டில் சென்னை அண்ணா பல்கலைக்கழகம்
  • சென்னைப் பல்கலைக்கழகம்
  • உத்தரப்பிரதேசத்தின் ஜான்சியில் உள்ள புந்தேள்கண்ட் (Bundelhkand) பல்கலைக்கழகம்,
  • ஆக்ராவில் உள்ள பீமாராவ் அம்பேத்கர் (Bhimrao Ambedkar) பல்கலைக்கழகம்
  • ஐதராபாது ஒசுமானியா பல்கலைக்கழகம்
  • பாட்டியாலாவில் உள்ள பஞ்சாப் பல்கலைக்கழகம்
  • ஒரிசாவின் (ஒடிசாவில்) புவனேசுவரில் உள்ள உத்கால் (Utkal) பல்கலைக்கழகம்

ஆகியவற்றில் தடயவியல் தொடர்பான படிப்புகள் வழங்கப்படுகின்றன.[4]

மேற்கோள்[தொகு]

  1. "தடய அறிவியல்". Archived from the original on 2016-03-07. பார்க்கப்பட்ட நாள் அக்டோபர் 17, 2012.
  2. "எங்களைக் கேளுங்கள்". தினமலர். பார்க்கப்பட்ட நாள் அக்டோபர் 17, 2012.
  3. 3.0 3.1 "தடய அறிவியல்: திக் திக் துறை விறு விறு தகவல்கள்". Archived from the original on 2012-06-19. பார்க்கப்பட்ட நாள் அக்டோபர் 17, 2012.
  4. 4.0 4.1 "தடய அறிவியல் (ஃபாரன்ஸிக் சயின்ஸ் ) கோர்ஸ் – ஓர் அறிமுகம்". ஜூலை 4, 2012. பார்க்கப்பட்ட நாள் அக்டோபர் 17, 2012. {{cite web}}: Check date values in: |date= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=தடய_அறிவியல்&oldid=3794174" இலிருந்து மீள்விக்கப்பட்டது