தூனிசை நோக்கி ஓட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தூனிசை நோக்கி ஓட்டம்
துனிசியப் போர்த்தொடரின் பகுதி

தூனிசை நோக்கி நேச நாட்டுப் படை முன்னேற்றம்
நாள் நவம்பர் 10 – டிசம்பர் 25, 1942
இடம் துனிசியா
அச்சு நாட்டு வெற்றி
பிரிவினர்
 ஐக்கிய இராச்சியம்
 ஐக்கிய அமெரிக்கா
 பிரான்சு
 ஜெர்மனி
 இத்தாலி
தளபதிகள், தலைவர்கள்
ஐக்கிய இராச்சியம் கென்னத் ஆண்டர்சன்
ஐக்கிய இராச்சியம் விவியன் ஈவிலேக்
நாட்சி ஜெர்மனி வால்டர் நேரிங்

தூனிசை நோக்கி ஓட்டம் (Run for Tunis) என்பது இரண்டாம் உலகப் போரின் வடக்கு ஆப்பிரிக்கப் போர் முனையில் நிகழ்ந்த ஒரு படை முன்னேற்றம். 1943ல் டார்ச் நடவடிக்கையின் மூலம் வடக்கு ஆப்பிரிக்காவில் தரையிறங்கிய நேச நாட்டுப் படைகள் துனிசியா நாட்டுத் தலைநகர் தூனிசை நோக்கி வேகமாக முன்னேறியதை இத்தொடர் குறிக்கிறது. இது துனிசியப் போர்த்தொடரின் ஒரு பகுதியாகும்.

நவம்பர் 8, 1942ல் நேச நாட்டுப் படைகள் அச்சு நாட்டுக் கட்டுப்பாட்டிலிருந்த வடக்கு ஆப்பிரிக்க நாடுகளான மொரோக்கோ மற்றும் அல்ஜீரியாவில் தரையிறங்கின. டார்ச் நடவடிக்கை என்று குறிப்பெயரிடப்பட்டிருந்த இந்த நடவடிக்கை பெருவெற்றி அடைந்து மூன்று நாட்களுள் காசாபிளாங்கா, அல்ஜியர்ஸ், ஓரான் ஆகிய துறைமுகங்கள் நேச நாட்டுக் கட்டுப்பாட்டில் வந்தன. டார்ச் நடவடிக்கை நடந்து கொண்டிருந்த அதே நேரத்தில், வடக்கு ஆப்பிரிக்கப் போர்முனையின் இன்னொரு புறம் இரண்டாம் எல் அலாமெய்ன் சண்டையில் அச்சுப் படைகள் தோற்றுப் பின்வாங்கிக் கொண்டிருந்தன. அப்படி பின்வாங்கும் அச்சுப் படைகள் துனிசியாவிற்குள் தஞ்சம் புகுந்து தூனிஸ் நகரைத் தங்கள் தளமாக்கக் கூடும் என்பதை நேச நாட்டுத் தளபதிகள் உணர்ந்தனர். அச்சுப்படைகள் கிழக்கிலிருந்து தூனிஸ் நகரை அடைவதற்குள், மேற்கில் அல்ஜீரியக் கடற்கரையிலிருந்து விரைந்து அந்நகரைக் கைப்பற்ற முடிவு செய்தனர்.

நவம்பர் 10ம் தேதி தூனிஸ் நகரை நோக்கி நேச நாட்டுப் படைமுன்னேற்றம் தொடங்கியது. ஒரு டிவிசன் அளவிலான படைப்பிரிவு விரைந்து கிழக்கு நோக்கி முன்னேறத் தொடங்கியது. இக்குறிக்கோள் படைப்பிரிவு (taskforce) இரண்டாகப் பிரிக்கப்பட்டு வட திசையில் ஒன்றும் தென் திசையில் ஒன்றும் ஜெர்மானிய அரண்நிலைகளைத் தாக்கின. நவம்பர் 26 வரை இரு பிரிவுகளும் ஜெர்மானிய எதிர்ப்புகளை முறியடித்து வேகமாக முன்னேறின. நவம்பர் கடைசி வாரத்தில் சண்டையின் போக்கு மாறியது. தூனிசைக் காப்பாற்ற வடக்கு ஆப்பிரிக்காவுக்கு அனுப்பப்பட்ட புதிய ஜெர்மானியப் படைப்பிரிவுகள் உடனடியாக ஒரு எதிர்த்தாக்குதலை மேற்கொண்டு, நேச நாட்டுப் படைகளைப் பின்வாங்கச் செய்தன. மூன்று வாரங்கள் மந்த நிலைக்குப் பின்னர் நேச நாட்டுப் படைகள் தூனிசைக் கைப்பற்ற மீண்டுமொரு பெருந்தாக்குதலைத் தொடங்கின. ஆனால் சில நாட்கள் சண்டைக்குப் பின்னர் அத்தாக்குதல் தோல்வியடைந்தது.

தூனிசை நோக்கிய நேச நாட்டுப் படை முன்னேற்றம் டிசம்பர் 25ல் முடிவுக்கு வந்தது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=தூனிசை_நோக்கி_ஓட்டம்&oldid=1381915" இலிருந்து மீள்விக்கப்பட்டது