வாசுதேவ நாணயக்கார

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வாசுதேவ நாணயக்கார
பிறப்பு3 சனவரி 1939 (அகவை 85)
படித்த இடங்கள்

வாசுதேவ நாணயக்கார என்பவர் ஒரு சிங்கள அரசியலாளர் ஆவார். இவர் இலங்கை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், கொழும்பு மாநகர சபையின் எதிர்க்கட்சித் தலைவரும், இடதுசாரி முன்னணியின் தலைவருமாவர். சிறந்தப் பேச்சாளரான இவர் சனாதிபதி மகிந்த ராசபக்சாவின் அரசியல் ஆலோசகர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இலங்கை அரசின் மனிதவுரிமை மீறல் தொடர்பில்[தொகு]

இலங்கை சனாதிபதியின் ஆலோசகராக இருந்தப் போதிலும் அரசாங்கத்தின் மனிதவுரிமை மீறிய செயல்பாடுகள் தொடர்பாக அரசாங்கத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். இலங்கையில் நடக்கும் படுகொலைகள் தொடர்பில் "கோழைத்தனமான இப்படுகொலைச் செயற்பாடுகளைக் கடுமையாக கண்டிப்பதோடு, அதற்கான முழுப் பொறுப்பையும் அரசு ஏற்றாக வேண்டும்" என்றும் கூறிவருகின்றார்.[1] அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்றமையும் குறிப்பிடத்தக்கது. இலங்கை அமெரிக்க பாதுகாப்பு ஒப்பந்தத்தை ரத்து செய்யுமாறு கோரி உயர் நீதிமன்றில் மனு தாக்கல் செய்தார்.[2]

சனாதிபதியின் ஆலோசகராக இருந்துகொண்டு ஒவ்வொரு மூலையிலும் சனாதிபதியையும் அரசாங்கத்தையும் விமர்சிப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது என்பதே அரசாங்கத்தின் நிலைப்பாடாக உள்ளது.[3] என்றும் அதனைத் தொடர்ந்து அவரை அப்பதவியில் இருந்து நீக்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

இலங்கை இனப்பிரச்சினை தொடர்பில்[தொகு]

இலங்கை தமிழர் பிரச்சினைத் தொடர்பில் யுத்தத்தை நிறுத்தி சமாதான பேச்சு வார்த்தையின் ஊடான அரசியல் தீர்வையே முதன்மைப் படுத்தி பேசி வந்த இவர் தமிழர் பிரச்சினைக்கு ஒரு நிலையான நியாயமான முடிவு எட்டவேண்டும் என்பதில் ஆரம்பம் முதல் அக்கறை காட்டி வருபவர் ஆவர். தமிழர் பிரச்சினை மட்டுமன்றி இலங்கை சிறுபான்மை இனங்களான தமிழர் முஸ்லீம்கள் தொடர்பிலும் அவர்கள் உரிமைகளை மதித்து ஏற்றுக்கொண்டு அரசு நியாயமாகச் செயல் பட வேண்டும் எனவும் வழியுறுத்தி வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது. சிங்கள இனவாத கருத்துக்களை எதிர்த்து பதிலளித்து வரும் இவர், அதற்கான எதிர் கேள்விகளையும் தொடர்ந்து எழுப்பி வருபவராவர்.

தமிழர் தன்னாட்சி அதிகாரங்களை விரும்புகின்றனர் என்றால் அதனை தமிழ் மக்களே முடிவு செய்ய வேண்டும் என்பது இவரது நிலைப்பாடாக இருந்து வருகின்றது. அரசியல் நோக்கில் தமிழ் மக்களுக்கு உயர்ந்தளவிலான அதிகாரப் பரவலாக்கலை அரசு முன்வைக்க வேண்டுமென்றும் என்ற தனது கருத்துக்களையும் வெளிப்படுத்தி வருகிறார்.[4]

இலங்கை போர் இனவழிப்பு போர்[தொகு]

போரின் போது போர் பகுதிகளில் வாழும் மக்கள் அதனுள் சிக்குண்டு இறத்தல் அபாய நிலைக்கு உற்படல் இடம் பெறலாம். ஆனால் பொது மக்களை இலக்காகக் கொண்டு மேற்கொள்ளப் படும் இலங்கையில் நடக்கும் போர் மிருகத்தனமான மிலேட்ச செயலாகவே தாம் பார்ப்பதாகவும் இப்போரை உன்னிப்பாக நோக்குமிடத்து ஒரு சமுகத்தினரை அழித்தொழிக்கும் இனவழிப்பு நடவடைக்கை (genocide) என்றும் ஆங்கிலம் மற்றும் சிங்கள மொழிகளில் வெளிப்படுத்தி வருகின்றார்.[5]

அரச பொய் பரப்புரைகளை எதிர்த்தல்[தொகு]

இலங்கை அரச ஊடகங்கள் வெளியிடும் பொய் பரப்புரைகளை அப்பப்போது சுட்டிக் காட்டி வருபவர். கொழும்பு புறக்கோட்டையில் இடம்பெற்ற ஒரு குண்டு வெடிப்பு நிகழ்வு தொடர்பாக இலங்கை அரச ஆதரவு ஊடகங்கள் புலிகளே இந்த குண்டு வெடிப்பை நடத்தினர் என்று வெளியிட்டப் பொய் பரப்புரைகளை மறுத்து அதற்கான காரணிகளையும் விளக்கி இருந்தார்.[6]

ஊடகச் சுதந்திரம் தொடர்பில்[தொகு]

ஆயுத பலத்தை பயன்படுத்தி ஊடகவியலாளர்களை அடக்குமுறைகளுக்கு உட்படுத்துவோர் பொதுமக்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என அரசுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தார்.[7] ஊடகவியலாளர்களுக்கு விடுக்கப்பட்ட அச்சுறுததல் சனநாயகத்திற்கு அடிக்கப்பட்ட சாவு மணி எனவும் குறிப்பிட்டிருந்தார்.[8]

தமிழ் சட்டத்தரணிகள் தொடர்பில்[தொகு]

தமிழீழ விடுதலைப் புலி சந்தேக நபர்களின் சார்பில் வாதிட முன்வரும் தமிழ் சட்டத்தரணிகளின் பாதுகாப்பை உறுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அவர்களை தேசத்துரோகிகள் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கும் செய்தியை நீக்க வேண்டும் எனவும் வாசுதேவ நாணயக்கார மகிந்த ராசபக்சாவிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.[9]

சிறப்பும் விமர்சனப் பார்வையும்[தொகு]

இலங்கை அரசியல் விவாதங்கள் மற்றும் கருத்தரங்குகளில் அதிகமாகப் பங்குபற்றும் வாசுதேவ நாணயக்கார தமது கருத்துக்களை மிகவும் நிதானமாகவும் ஆணித்தரமாகவும் முன் வைத்து வருவதை அவதானிக்கலாம். இலங்கை இனப்பிரச்சின தொடர்பில் யுத்தம் ஒரு தீர்வாக அமையப் போவதில்லை, பேச்சு வார்த்தையின் ஊடாகவே இப்பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் என்றும் கூறி வருபவர். குறிப்பாக இலங்கை சிறுபான்மை இனத்தவர் தொடர்பிலான இவரது கருத்துக்களால், சிறுபான்மை இனத்தவர்கள் இவரை ஒரு நடுநிலையாளராகவே பார்த்து வருகின்றனர். அதேவேளை இலங்கை சிங்கள இனவாதக் கருத்துக்களை எதிர்த்து சிறுபான்மை இனத்தவரின் நியாயப்பாடுகளை சிங்கள அரசியலாளர்களிடம் சுட்டி வருபவர். இதுப் போன்ற இவரது பேச்சுக்கள் எதிர்கருத்தாளர்களை திணரச்செய்த நிகழ்வுகள் பல உண்டு. அரசியல் தொலை நோக்குப் பார்வையும் இலங்கையில் அனைத்து மக்கள் சமூகத்தினருக்கும் சமநீதி இருக்கவேண்டும் எனும் இவரது கோட்பாடும் சிங்கள இனவாத சக்திகளாலும், சிங்கள இன மேலாதிக்கத்திற்கு முன்னுரிமை கொடுக்கும் சிங்கள மக்களாலும் வெறுக்கப் பட்ட ஒரு நபராகவே வாசுதேவ நாணயக்கார இனங்காணப்பட்டார்.

வாசுதேவ நாணயக்கார போன்ற பேச்சாற்றல் மிக்கவர்கள் அரசியல் விவாதங்களில் இருப்பது ஆரோக்கியமானது எனக் கருதும் ஒரு தரப்பினர் இருந்தாலும், அதிகமான சிங்கள இனத்தவர்கள் இவரது பேச்சை விரும்புவதில்லை. இதனால் அநேக சிங்கள ஊடகங்கள் இவரது கருத்துக்களுக்கு முன்னுரிமை கொடுத்து வெளியிடுவதில்லை.

இருப்பினும் இன்றைய யுத்தச் சூழ்நிலையை அரசதந்திர ரீதியில் பிரச்சினைகளை அணுகி தீர்வுகாண வேண்டும் எனும் இவரது கருத்தும் [10] இலங்கை சனாதிபதி மகிந்த ராசபக்ச தனது பிரதான அரசியல் ஆலோசகராக இவரை வைத்திருப்பதும் சிந்தனைக் குரிவைகளாகும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. தென்னிலங்கையில் யுத்த ஆதரவு அதிகரிப்பு அழிவே ஏற்படுமென வாசுதேவ எச்சரிக்கை
  2. [1][தொடர்பிழந்த இணைப்பு]
  3. "ஜனாதிபதி ஆலோசகர் பதவியில் இருந்து நீக்கப்படவுள்ளார்". Archived from the original on 2016-03-05. பார்க்கப்பட்ட நாள் 2009-02-12.
  4. தமிழ் மக்களுக்கு உயர்ந்தளவிலான அதிகாரப் பரவலாக்கலை
  5. Vasudeva Nanayakkara Speaks on Civilin Targeted of War
  6. "புலிகளுக்கு தொடர்பில்லை என்கிறார் வாசுதேவ". Archived from the original on 2016-03-05. பார்க்கப்பட்ட நாள் 2009-02-12.
  7. ஜனநாயகத்திற்கு அடிக்கப்பட்ட சாவு மணி[தொடர்பிழந்த இணைப்பு]
  8. ஊடகவியலாளர்களுக்கு விடுக்கப்பட்ட அச்சுறுததல் ஜனநாயகத்திற்கு அடிக்கப்பட்ட சாவு மணி
  9. "தமிழ் சட்டத்தரணிகள் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்". Archived from the original on 2008-12-26. பார்க்கப்பட்ட நாள் 2009-02-12.
  10. ராஜதந்திர ரீதியில்

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வாசுதேவ_நாணயக்கார&oldid=3571145" இலிருந்து மீள்விக்கப்பட்டது